திருவள்ளூர் : பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், பிரதமரின் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினால் கடந்த 12 ஆண்டுகளாக கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்திற்கு 2020-21ம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற 79 பயனாளிகளுக்கு ரூ.210 லட்சம் மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவர்களின் கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். கடனுதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் தேவையில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவி குழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, காக்களுர் தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை, நேரிலோ அல்லது 044-27666787, 9788877322 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.