புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அறந்தாங்கி அருகே உள்ள ஆயங்குடியை சேர்ந்த ராஜசேகர் சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தங்கி இருந்த அவர் திடீரென கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 6 இடங்களில் சுகாதாரத்துறையினர் சீல் வைத்துள்ளனர். வண்ணாரப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், பெருமாள் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்திய ஊழியர்கள், மற்றவர்கள் உள்ளே நுழையாத அளவுக்கு அந்த பகுதிகளை சீல் வைத்தனர்.