சென்னை: தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கொரோனா தாக்குதலால் தனியார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகிய 6 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனுக்கு மனப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். கே.பி.அன்பழகனுடன் ஜெயகுமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர். இந்த அமைச்சர்கள் கடந்த சில நாட்களாக வடசென்னை மற்றும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முகாமிட்டு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் டிரைவர் விவேகானந்தனுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோன்று ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் டிரைவர், உணவுத்துறை அமைச்சர் பாதுகாவலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமைச்சர் அன்பழகன் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அமைச்சரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். திடீரென அவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.
வடசென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே தனியார் மருத்துவமனையில், பெரும்புதுார் அதிமுக எம்எல்ஏ பழனி, அவரது மனைவி, மகள் மற்றும் திமுக கலை இலக்கிய அணி இணை செயலாளர் கலைராஜன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் அன்பழகன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பென்ஜமினும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.