×

புதிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் தேர்தல் முடிவு; ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வெற்றி: 192ல் 184 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன

நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், புதிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 192 நாடுகளில் இந்தியாவுக்கு ஆதரவாக 184 நாடுகள் வாக்களித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் என்பது ஐ.நா சபையின் 6 முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். உலகெங்கிலும் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய பணியாகும். ஐ.நா சபையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதோடு, அதன் சாசனத்தில் மாற்றங்களை மேற்கொள்வதும் பாதுகாப்பு கவுன்சிலின் பணிகளில் ஒன்றாகும். இந்த சபை உலக நாடுகளுக்கு இடையே சமாதானம் நிலவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.

உலகின் எந்தப் பகுதியிலாவது ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டால், அது பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மொத்தம் 192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா-வின் பொதுச் சபை, 2021-22 காலத்திற்கான தலைவர், பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக நிரந்தரமற்ற உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்றிரவு நடந்தது. அதன்படி, 5 நாடுகள் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் இந்தியா, அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன.

கடந்த 1950 - 1951, 1967 - 1968, 1972 - 1973, 1977 - 1978, 1984 - 1985, 1991-1992, 2011 - 2012ம் ஆண்டுகளில் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர் இடத்தை இந்தியா பெற்றது. தற்போது 8வது முறையாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, ஐ.நா சபையின் இந்தியாவின் பிரதிநிதி டி.எஸ்.மிருமூர்த்தி கூறுகையில், ‘இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு கவுன்சிலில் முன்னிலை வகிக்கும். ஐ.நா அமைப்புக்கு புதிய பாதையை வகுக்கும் ஆலோசனைகளை வழங்கும். மொத்தமுள்ள 192 வாக்குகளில் இந்தியாவுக்கு 184 வாக்குகள் கிடைத்தன. இந்தியா 2021-22ம் ஆண்டிற்கான பாதுகாப்பு கவுன்சின் தற்காலிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.

இந்தியா தேர்வு செய்யப்பட்டது குறித்து அமெரிக்க தரப்பில், ‘இந்தியாவை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளில் ஒன்றிணைவோம்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ‘இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது எங்களுக்கு கவலை அளிக்கும் விஷயம். இருப்பினும், இந்தியா உறுப்பினராக இருப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை’ என்றார்.

பிராந்திய அடிப்படையில் ஒதுக்கீடு
ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஒரு நாட்டுக்கு எதிராகவோ, அணுசக்தி கொள்கை, பொருளாதார தடை உள்ளிட்டவை குறித்தோ கொண்டு வரப்படும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட ‘வீட்டோ பவர்’ பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் நான்கின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் 5 தற்காலிக இடங்களுக்கான தேர்தல் நடைபெறும். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இரண்டு ஆண்டு காலத்திற்கு மொத்தம் 10 தற்காலிக உறுப்பினர்களில் ஐந்து பேரை பொதுச் சபை தேர்வு செய்கிறது.

பிராந்திய அடிப்படையில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஐந்து இடங்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு இடமும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இரண்டு இடங்களும், மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்படுகிறது. சபைக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் தேர்வு செய்யப்படுகிறது.

Tags : election ,member states ,India ,UN Security Council ,countries , Member States, Election Results, UN Security Council, India Success
× RELATED இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு...