×

புதுகை அருகே 14 நாள் முழு ஊரடங்கை கடைபிடிக்கும் கிராமம்: வெளியில் இருந்து வருவோருக்கு அனுமதி இல்லை

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரம் மற்றும் ஒன்றியத்தில் கடந்த சில நாட்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னமராவதி அருகே உள்ள ஒரு கிராமம் கட்டையாண்டிப்பட்டி. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சுயக்கட்டுப்பாடு ஏற்படுத்தி நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை ஊர் மக்கள் வெளியில் செல்லக்கூடாது என்றும், வெளி நபர்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என்றும் கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை கிராமமக்கள், வெளியூர்களிலிருந்து வருவோர் தெரிந்துகொள்ளும் வகையில் கிராம எல்லையான ஊரின் விலக்கு சாலையில் இருந்து ஊருக்கு செல்லும் வழியில் போலீசாரிடமிருந்து பேரிகார்டுகளை வாங்கியும், முட்களை போட்டும் சாலையை அடைத்துள்ளனர். இந்த கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15ம் தேதியே தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்திற்கு ஒரு நாள் வீட்டுக்கு ஒருவர் மட்டுமே முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் கிராம மக்களே முழு ஊரடங்கை பின்பற்றி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Village ,Pudukkai , Pudukkai, full curfew, village
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...