×

காட்டுப் பன்றியை கொன்று, விஷம் கலந்து புலிகளுக்கு விருந்தாக்கிய கொடுமை : சாராயம் காய்ச்சுவதற்கு தொந்தரவாக இருந்ததால் இளைஞர்கள் சதி!!

மும்பை : மகாராஷ்டிரா புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் புலி மற்றும் அதன் 2 குட்டிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பக வனப்பகுதியில், கடந்த 10ம் தேதி தாய் புலியும் அதன் 2 குட்டிகளும் இறந்து கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் புலிகளை பரிசோதனை செய்தனர். அதில் புலிகளின் உடல் பாகங்கள் காயம் ஏதுமின்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் 3 புலிகளின் உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் புலிகளின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கோண்டேகான் கிராமத்தில் வசிக்கும் சூர்யபன் தாகரே, ஷ்ரவன் மாதவி மற்றும் நரேந்திர தத்மல் ஆகிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் திட்டமிட்டே விஷம் வைத்து புலிகளை கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மூவரும் மஹு பூக்களிலிருந்து சட்ட விரோதமாக மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தடோபா அந்தாரி புலிகள் காப்பக வனப்பகுதியில், கோண்டேகான் குளம் அருகே இவர்கள் சட்டவிரோதமாக தொழில் செய்து வருகின்றனர். அங்கு புலி நடமாட்டம் இருந்துள்ளது. ஆகையால் அது அவர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனவே தாய் புலியையும் அதன் குட்டிகளையும் கொல்ல முயன்ற அவர்கள், அங்கு உலாத்தும் காட்டுப்பன்றி ஒன்றை மஹு பூக்களில் விஷம் வைத்து கொன்றனர். பிறகு இறந்த காட்டுபன்றியின் உடலிலும் விஷம் வைத்துள்ளனர். தாய் புலியும், அதன் 2 குட்டிகளும் விஷம் கலந்த காட்டுபன்றியின் உடலை உண்டதால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.  



Tags : killing ,Tiger , Wild boar, killing, poison, tigers, cruelty, booze, fever, youth, conspiracy
× RELATED எருது விடும் விழா கோலாகலம்