- வேளாண் பல்கலைக்கழகம்: அரசு
- ஒரு சமூக இடைவெளி இல்லாமல் தொழிலாளர்களை நடவு செய்தல்
- அரசு
- வேளாண் பல்கலைக்கழகம்
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உழவு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 17 நாட்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தனிமனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும், மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர கூடாது எனவும், கம்பெனிகள், கடைகளில் பணியாற்றும் நபர்கள் கூட கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலங்களில் பணியாற்றுபவர்கள் அரசின் வழி முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர்-பூசாரிப்பாளையம் ரோட்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஏக்கர் கணக்கில் நன்செய் நிலம் உள்ளது. இந்த நன்செய் நிலத்தில் நெல் விதைக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது.
நெல் தொடர்பான புதிய ரகங்கள் வெளியிடவும், ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் நெல் நாற்று நடப்பட்டு புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நாற்று நடும் பணிக்கு சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். தற்போது, கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், நாற்று நடும் பணிக்கும் வரும் தொழிலாளர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் மாஸ்க் உள்ளிட்ட வழங்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் ஒன்றிணைந்து நாற்று நடும் பணியில் மணிக்கணக்கில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இல்லை. இப்பணியில் ஈடுபடும் அனைவரும் ஏழை எளியவர்கள். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, வேளாண் பல்கலைக்கழகம் உழவு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாஸ்க் உள்ளிட்டவற்றை வழங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், ெதாழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.