மாமல்லபுரம்: நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ஊரடங்கு தடையை மீறி ஒரு காதல் ஜோடி தங்குவதற்கு அறை வழங்கப்பட்டுள்ளது. தகவலறிந்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில், காதல் ஜோடி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
பின்னர், ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக விடுதியில் தங்கியதாகவும், அந்த காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஊரடங்கு தடையை மீறி அறை வழங்கிய உரிமையாளர் மற்றும் மேலாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தடையை மீறி அறை வழங்கிய தனியார் விடுதிக்கு திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ் உத்தரவின் பேரில், மாமல்லபுரம் வருவாய்த்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.