ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே இருந்து 446 மதுபான பாட்டில்களை வாங்கி சென்னைக்கு சென்ற 9 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். நாளை முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் அடுத்த பாளேஸ்வரம் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கிருந்து அதிக அளவில் மதுபானங்களை சென்னையை சேர்ந்தவர்கள் வாங்கிச்செல்கின்றனர். இங்கு வாங்கிச்செல்பவர்கள் அதை, சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் ஊத்துக்கோட்டை எஸ்.ஐக்கள் ராக்கிகுமாரி, சீனிவாசன், சிறப்பு எஸ்ஐ சம்பத், ஏட்டுகள் செல்வராஜ், லோகு, அரி மற்றும் போலீசார் பாளேஸ்வரம் பகுதியில் நேற்று திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக சென்ற பைக்குகளை மடக்கினர். அப்போது, மணலியை சேர்ந்த ரமேஷ் (27), பெரியபாளையத்தை சேர்ந்த சார்லஸ் (27), சுரேந்தர் (38), நாகராஜ் (23), சந்திராபுரம் பகுதியை சேர்ந்த அருணகிரி (38), சென்னை புழல் பகுதியை சேர்ந்த செந்தில் முருகன் (35), நெல்வாய் பகுதியை சேர்ந்த சக்ரவர்த்தி (53), பெரியபாளையத்தை சேர்ந்த பாக்கியராஜ் (33), அரியபாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 446 மதுபான பாட்டில்களையும் அதை எடுத்து செல்ல பயன்படுத்திய 8 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இதனால், பாளேஸ்வரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.