சென்னை: ராணுவ வீரர் மறைவிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழக ராணுவ வீரர் பழனி உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தவிர்த்து அமைதியான சூழலை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ராணுவ வீரர் பழனி, சீன ராணுவத்தோடு நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்தார் என்ற துயர செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்.முருகன் (தமிழக பாஜ தலைவர்): லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலை எதிர்த்து போர் புரிந்த இந்திய ராணுவ உயரதிகாரி மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளித்தது. இதில்தமிழகத்தை சேர்ந்த பழனியும் ஒருவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாஜ சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். நாட்டிற்காக வீர மரணம் எய்திய அவரது தியாகம் என்றென்றும் போற்றப்படும். அவரது ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த நிழல் யுத்தத்தில் மரணடைந்த இதர ராணுவ வீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.