×

இ-பாஸ் கிடைச்சாலும் சொந்த ஊர் போறதை பத்தி கொஞ்சம் யோசிங்க பாஸ்: உங்கள் ஊர் இனிதே வரவேற்காது

சென்னை: சென்னையில் கொரோனா தீயாய் பரவிக்கொண்டிருப்பதாலும் ஊரடங்கு கெடுபிடியாலும் பலர் விட்டால் போதும் என்று சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் ஊருக்கு போவதற்கு முன் கள நிலவரத்தை பார்த்து ஒரு முறைக்கு பல முறை யோசித்துக்கொள்வது நல்லது. நிலைமை அப்படி இருக்கிறது. ஏனென்றால் இதுவரை பார்த்த உங்கள் மாவட்டம் இப்போது உங்களுக்கு வேறு முகத்தை காட்டும். இதுவரை நீங்கள் ஊருக்கு செல்லும்போது, தென்காசி மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது; விருதுநகர் மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது; கிருஷ்ணகிரி மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்றெல்லாம் பெயர் பலகைகளை பார்த்திருப்பீர்கள். இப்போதும், அந்த பெயர் பலகைகள் என்னவோ அங்கேதான் இருக்கின்றன. ஆனால், இனிமேலும் அது உங்களை அன்போடு வரவேற்கப்போவது கிடையாது. இ-பாஸ் பெற்று சொந்த ஊருக்கு கிளம்பும்போது ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கொள்ளும். வழியில் எங்குமே உங்களை தடுத்து நிறுத்தி பெரிதாக கேள்வி கேட்கப் போவது கிடையாது. ஆனால் பிரச்னை நீங்கள் போக விரும்பிய உங்கள் சொந்த மாவட்டத்தில்தான் ஆரம்பிக்கும்.

முதல் தடை:  மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படும் நீங்கள், முதலில் தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதன் பிறகு அங்குள்ள தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவீர்கள். சென்னை, மும்பை போன்ற இடங்களில் இருந்து வருவோருக்கு இந்த கெடுபிடி அதிகம். அவர்களது நடவடிக்கையிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிகம் பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும், கொரோனா பாதிப்பை பரவ விட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இதற்கு காரணம். வசதிகள் கிடையாது:  ஆனால், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்தான், எதற்காக ஊருக்கு போக வேண்டும் என்று உங்களை நினைக்க வைத்துவிடும். கொரோனாவை தடுப்பதற்கு பதில் அதை பரப்பும் விதத்தில் தான் முகாமில் உள்ள வசதிகள் இருக்கும். மொத்த முகாமுக்கும் ஒரே கழிவறைதான். பரிசோதனை கூட அன்றே நடக்காது. அடுத்த நாளோ அல்லது ஓரிரு நாட்களோ கூட ஆகும். அதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும், பெண்கள், குழந்தைகள் உங்களுடன் வந்து இருந்தாலும் அந்த முகாமில்தான் தங்கியாக வேண்டும்.

வீட்டில் தங்க அனுமதி கிடையாது:  முகாம்களில் தங்கியிருப்பவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறதோ அது தெரியாது. எட்டிப் பார்க்கும் தூரத்தில் வீடு இருந்தாலும் சரி அங்கே உங்களை தங்க அனுமதிக்க வைக்கப்போவதில்லை.  செல்போன் ஆப் பதிவு செய்கிறேன், வீட்டுக்குள்ளேயே 14 நாட்கள் இருக்கிறேன் என என்னதான், காரணம் சொன்னாலும், அதை அதிகாரிகள் நம்பப் போவது கிடையாது. வீட்டு தனிமையில் இருக்க வேண்டிய பலரும் ஊர் சுற்றியதால், இப்போது அதிகாரிகளுக்கும் வேறு வழி இல்லாமல் ஆகிவிட்டது. வீடுகளை கண்காணிக்க முடியாது:  ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகாரிகளை போட்டு நாங்கள் கண்காணிக்க முடியாது, எனவே இந்த முகாமில் நீங்கள் இருந்தாக வேண்டியது கட்டாயம் என்றுதான் அதிகாரிகள் சொல்வார்கள். இதற்கு நாம், சென்னையிலேயே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்கள் ஆழ்மனதில் தோன்றி நிலைகுலைய செய்யும். இவ்வளவு செலவு செய்து.. இவ்வளவு அலைச்சலுக்கு பிறகு தங்கும் முகாமில், கூட்டத்தோடு இப்படி ஆபத்தான சூழலில் அகப்பட்டுக் கொண்டோமே என்ற எண்ணமே உங்களை பாதி நோயாளி ஆக்கி விடும்.

இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. சொந்த செலவில் தனிமைப்படுத்தப்படும் ஓட்டல் அறைகளை தேர்ந்தெடுப்பது. வசதியானவர்களுக்கு தான் இதை சரிப்படும். மற்றவர்களுக்கு முகாமே கதி. இதில் மாவட்ட நிர்வாகங்களை குறை கூற முடியாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கழிவறை, அல்லது ஒவ்வொரு முறையும் கழிவறையை சுத்தமாக கழுவி கொடுப்பது என்பதெல்லாம், யதார்த்தத்தில் நடக்க முடியாத விஷயம். கொரோனா பரவல் கிராமங்களிலும் நுழைந்துவிடாமல் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருப்பதால், அவர்கள் கடுமைகாட்டத்தான் செய்வார்கள். எனவே சென்னைவாசிகளே நீங்கள் வீட்டிலேயே தகுந்த பாதுகாப்போடு இருப்பதுதான இப்போதைக்கு நல்லது.
 ஊருக்கு போகும் முயற்சியில் அலைக்கழிக்கப்படுவது ஒரு பிரச்சனை என்றால், இ பாஸ் கிடைப்பது மற்றொரு பிரச்னை. அவ்வளவு எளிதில் கிடைக்காது. நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்ட நிர்வாகம்தான் உங்களுக்கு அனுமதி தர வேண்டும். முன்பு நீங்கள் வசிக்கும் மாவட்ட நிர்வாகம் இந்த அனுமதியை கொடுத்து வந்தது. எனவே, எந்த மாவட்டமாக இருந்தாலும், சரி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இ பாஸ் கேட்போருக்கு, அவ்வளவு எளிதில் பாஸ் கொடுப்பது இல்லை. மறுபடியும் நினைவில் வைத்துக்கொள்ளங்கள்.. உங்கள் ஊர் உங்களை அன்போடு வரவேற்காது.

Tags : paragraph ,town , Even ,get, e-pass, think , your hometown,
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...