சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம்: “ஜூன் 19ம் தேதி (நாளை) முதல் 30ம் தேதி வரை அமலுக்கு வரவுள்ள ஊரடங்கு காலத்தில் ஐகோர்ட் உட்பட நீதிமன்றங்களில் வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. வீடியோ கான்பரன்ஸ் வசதியை வக்கீல்கள் தங்கள் அலுவலகங்களிலேயே அமைத்து உள்ளனர். முழு ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டால் அவர்களால் நீதிமன்ற வளாகங்களில் உள்ள தங்கள் அறைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அவர்கள் தங்களின் அறைகளுக்கு செல்லவில்லை என்றால் வக்கீல்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, வக்கீல்கள் அவர்களின் அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்க கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகத்தை திறக்க செல்லும் வக்கீல்கள் பார் கவுன்சில் அடையாள அட்டையை காண்பிக்கும்பட்சத்தில் அவர்களை அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றை வக்கீல்கள் கண்டிப்பாக கடைபிடிப்பார்கள்” என்று கோரியுள்ளார். இந்த மனு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போலீஸ் எஸ்பிக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.