சென்னை: முழு ஊரடங்கின் போது அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று முன் எப்போதும் இல்லாத வகையில் உச்சக்கட்டத்தில் பரவி வருகிறது. தேசிய அளவில் அதிகம் கொரோனா தொற்று உள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும். முழு ஊரடங்கு அமலாகவுள்ள சென்னை மற்றும் 3 மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;
* நகர காவல் எல்லையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படும்.
* பொதுமுடக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* முழு ஊரடங்கின் போது அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* அனுமதியின்றி வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்.
* போலி அனுமதிச்சீட்டு பயன்படுத்தி வாகனம் ஓட்டினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வாகனங்களில் செல்லும்போது விமானம், ரயில் பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை வைத்திருக்க வேண்டும்.
* அத்தியாவசிய பொருட்களை அருகில் உள்ள கடைகளிலே வாங்கி கொள்ள வேண்டும்.
* மருத்துவ சேவைகளுக்கு ஆட்டோ, கார்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
* அத்தியாவசிய தேவைகளுக்கு இயங்கும் வாகனங்கள் அனைத்தும் உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.