* அமைச்சர் உதயகுமார் தகவல்
சென்னை: திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்து, கொேரானா தடுப்பு பணியாளர்களுக்கு நோய் தடுப்பு உபரணங்களையும், களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கினார். அப்போது, சிறப்பு அதிகாரி காமராஜ், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, அலெக்சாண்டர் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தான் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இறப்பு விகிதமும் மிக குறைவாக உள்ளது. பொதுமக்கள் 100 சதவீதம் விழிப்புணர்வோடு இருந்தால் கொரோனா வைரஸ் நோய் வராமல் பாதுகாக்க முடியும்.
சென்னையில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீடு வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலம் சித்தா கூட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு, தாளிசாதி வழங்கப்படுகிறது.
அதே நேரம் அந்த வீட்டில் உள்ளவர்களின் உடலின் வெப்பநிலையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.