சென்னை: சென்னையில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியே சுற்றி வந்த 66 பேர் மீது மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநகரில் தொற்று எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்று பாதித்த மண்டலங்களில் பல கட்டுப்பாடுகள் விதித்தாலும் மக்கள் அதை கண்டு கொள்ளாமல் சர்வ சாதாரணமாக வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் நோய் தொற்றின் வேகம் பரவி வருகிறது. எனவே, தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தெருக்கள் மற்றும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஒரு வாரத்தில் எந்தவொரு அறிகுறியும் இன்றி தடை செய்யப்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுதப்பட்டனர். அவர்களில் 66 பேர் வீட்டில் இருக்காமல் தெருக்களில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவல் சுகாதாரத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் நோய் தொற்று அதிகளவில் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியே சுற்றி வந்த 66 பேர் மீது மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகார் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் நேற்று வரை தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே மக்களே கொரோனாவை பரப்பாமல் வீட்டிலேயே இருங்க... ேபாலீசில் சிக்குவதை தவிர்த்து விடுங்கள் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.