×

மருத்துவம் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி....! இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை: முதல்வர் நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: தமிழகத்தில் இருந்து வருவோர் இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். கடலூர், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் எல்லைகளுக்கு நாளை முதல் சீல் வைக்கப்படும் என அறிவித்துள்ளளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடந்து 1500 க்கு மேல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல் புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியைச் சுற்றியுள்ள மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Tags : Puducherry , Medical, e-Pass, Puducherry, CM
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...