டெல்லி: இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவுவதால் ராணுவ தளபதியின் பதான்கோர்ட் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சீனாவின் தாக்குதல் எதிரொலியால் ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவின் பதான்கோர்ட் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் பகுதியில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில் லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், நேற்று இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு ராணுவ வீரர்களும் வீர மரணமடைந்துள்ளனர். இதனால் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட பதற்றம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இந்தியா கொடுத்த பதிலடியில் 5 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதனிடையே ராணுவ தளபதி நரவனே பதான்கோட் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை பார்வையிட இருந்த நிலையில் தற்போது அங்கு பதற்றம் நிலவுவதால் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்நிலையில், இந்திய ராணுவம் எல்லையைத் தாண்டி சீனப் படைகளைத் தாக்கியதாக சீனா குற்றம்சாட்டி உள்ளது. இந்திய படைகள் எல்லை தாண்டுவதை தடுக்கவும், ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதையும் இந்திய அரசு தடுக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. எல்லை மோதலைத் தொடர்ந்து இந்திய ராணுவத் தளபதி நாரவனே தனது பதான்கோட் பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.