×

நீலகிரி மாவட்டத்தில் வருமானமின்றி தவிக்கும் பெற்றோர்கள்...கல்விக் கட்டணம் கட்ட வற்புறுத்துவதாக தனியார் பள்ளிகள் மீது புகார்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டி தனியார் பள்ளிகள் வற்புறுத்தி வருவதால் பெற்றோர்கள் விழிபிதுங்கி உள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இன்றி பலரும் தவித்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் கல்வி கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும் என தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது பெற்றோருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தங்களை தொடர்பு கொண்டு கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறுத்துகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் உணவின்றி தவிக்கும் சூழலில் கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறுத்துகின்றனர். இது தமக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்பை காரணம் காட்டி பள்ளிகள் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாகவும், இதனால் கல்வித்துறையும், மாவட்ட உடனடியாக நிர்வாகவும் , கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீனிடம் கேட்டபோது அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Tags : Parents ,Schools ,Nilgiris District , Nilgiris, parents, tuition, private school, complaint
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்