திருமலை: நாடு முழுவதும் வரும் 21ம் தேதி காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்பட உள்ளது. தொடர்ந்து ஜூன் 21ம் தேதி மதியம் 2.30 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்க உள்ளனர். இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படுகிறது.
எனவே வரும் 21ம் தேதி அன்று ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் கல்யாண உற்சவ சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரகணத்தின்போது தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற எந்த இடங்களிலும் அன்னப்பிரசாதம் வழங்கப்படாது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.