சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்தது.
கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளியூரில் இருந்து முறையான அனுமதி இல்லாமல் வருபவர்கள் மூலமாக திருவண்ணாமலையில் தொற்று பரவுகின்றது என்று தெரிவித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திருவண்ணாமலைக்கு வெளியூரில் இருந்து இ.பாஸ் பெற்று வருபவர்கள் மூலமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து பலர் முறையாக அனுமதி இல்லாமல் அதிகாலையில் வருகின்றார்கள். அவர்கள் மூலமாக நோய் பரவ அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. பலர் முகக்கவசம் முறையாக அணிவதில்லை எனவே மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.