நெட்டப்பாக்கம்: மடுகரை ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஒரு மாதமாக அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபற்றி கொம்யூன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் அடுத்துள்ள மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே கடந்த ஒரு மாதமாக குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நெட்டப்பாக்கம் ெகாம்யூன் பஞ்சாயத்து துப்புரவு ஊழியர்கள் அகற்ற வேண்டும். ஆனால் இதுவரை அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும் அவலம் நீடிக்கிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, இங்கு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றி வந்தனர். தினமும் குப்பை அகற்றிய அவர்கள் பின்னர் 15 நாளுக்கு ஒருமுறை அகற்றினர். இப்போது மாதம் ஒருமுறை அகற்றுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.