திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் புதிய துணைக்கோள் நகரம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு துணைக்கோள் நகருக்கான பணிகள் துவங்கியது. இதனடிப்படையில் சுமார் 583 ஏக்கர் பரப்பளவில் சுமார் 283 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள புதிய துணைக்கோள் நகரில் மொத்தம் 9557 வீட்டு மணைகள் உருவாக்கப்படவுள்ளது. இந்த துணைக்கோள் நகரில் நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைத்தல், குடிநீர் ஆதரங்களான ஆழ்துளை கிணறுகள், நீர்தேக்க தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவடைந்த நிலையில், மின் இணைப்பு பணிகளான மின்கம்பங்கள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவடையாததால் துணைக்கோள் நகரில் வீட்டுமனை வாங்கும் பொதுமக்களின் கனவு நிறைவேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
குறிப்பாக இந்த துணைக்கோள் நகரம் முழுவதும் தெருவிளக்குகள், வீடுகளுக்கான மின் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக சுமார் 1600 மின் கம்பங்கள் அமைக்க திட்டமிட்டு வீட்டுவசதி வாரியம் மின்கம்பம் மற்றும் மின் இணைப்புக்கான தொகையான சுமார் 2 கோடியே 24 லட்சம் ரூபாயை மின்வாரியத்திடம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் துணைக்கோள் நகரம் அமைந்துள்ள பகுதியில் தற்போது வரை சுமார் 900 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. எஞ்சிய மின்கம்பங்கள் நடப்படாமல் உள்ளது. அனைத்து மின்கம்பங்களும் நடப்பட்டால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும். மின் இணைப்பு வழங்கிய பின்னரே வீட்டு மனைகளை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கொரானா ஊரடங்கால் பல்வேறு பணிகள் முடங்கிய நிலையில் தற்போது அனைத்து அரசு பணிகளும் துவங்கிய நிலையில் துணைக்கோள் நகரத்திற்கான மின் இணைப்பு பணிகள் துவங்காததால் துணைக்கோள் நகர கனவு நனவாகுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.