மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் 150க்கும் மேற்பட்ட ரெஸ்டாரன்ட்டுகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதமாக அனைத்து ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகள் நட்சத்திர ஓட்டல்கள் மூடி இருந்தன. இந்நிலையில், தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்தியது. மேலும், கடந்த 8ம் தேதி ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள், தங்கும் விடுதிகளை சமூக இடைவெளியை பின்பற்றி திறந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சில ரெஸ்டாரன்ட்டுகள் மட்டும் திறக்கப்பட்டு அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஒத்தவாடை தெருவில் மூன்ரேக்கர் என்ற ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரன்டில் நேற்று இரவு சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 16 பேர் சட்டத்திற்கு புறம்பாக குடித்துவிட்டு கும்மாளம் போடுவதாக மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ சாதாசிவம் ஆகியோர் அந்த ரெஸ்டாரன்ட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் கல்லூரி மாணவர்கள் 16 பேர் குடித்துவிட்டு பாட்டு பாடி கொண்டும், டேபிளில் தாளம் போட்டு கொண்டும் ரகளை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், கல்லூரி மாணவர்கள் 16 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அறை வழங்கிய ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஆனந்தன் மீதும் வழக்கு பதிவு செய்து, ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் 4 கார் மற்றும் 7 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.