×

திமுக என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை நிரூபித்தவர் மக்கள் பணியில் இன்னுயிர் இழந்த ஜெ.அன்பழகன்

* மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்

சென்னை: திமுக என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை நிரூபித்தவர் ஜெ.அன்பழகன் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடந்தது. காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலோசித்தார். அப்போது, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த என்ன மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம். கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அடுத்த கட்டமாக என்ன நல உதவிகளை வழங்கலாம் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு பணியில் களப்பணியாற்றும் திமுகவினர் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று அப்போது அவர் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் தன் உடல்நிலையைவிட மக்களின் பசிப்பிணி நீக்குவதே முதன்மையானது என்கிற சீரிய பொதுநல சிந்தனையுடன், என்றென்றும் தலைமையின் வழிகாட்டுதலை சிறிதும் வழுவாமல் நிறைவேற்றுபவராகக் களப்பணியாற்றி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10ம் தேதி மறைவெய்தி, கட்சியினர் அனைவரையும் கண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சென்னை மாவட்ட தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கி- மிசா சிறைவாச சித்திரவதைகளை நமது தலைவர் ஸ்டாலினை ஏற்றுக்கொண்டு கட்சியை கட்டிக்காப்பதில் உறுதியாக விளங்கிய தனது தந்தை பழக்கடை ஜெயராமனின் அடியொற்றி, ஜெ.அன்பழகன் இளம் வயது முதலே கழகப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தலைவர் கலைஞரை தனது தந்தையின் இடத்தில் வைத்துப் போற்றியவர்.  தியாகராயர் நகர் பகுதியிலும், ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டத்திலும், பிறகு சென்னை மேற்கு மாவட்டத்திலும் கட்சிக்கு சிறப்பாக வலுவூட்டியவர். 2001, 2011, 2016 என 3 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி உறுப்பினராக பேரவையில் மக்கள் நலன் குறித்து முழங்கியவர். தலைவர் கலைஞர் குறித்து ஆளுங்கட்சியினர் அவதூறாகப் பேச முனைந்த போதெல்லாம், நொடிகூட தாமதிக்காமல் எழுந்து நின்று, எரிமலையாய்க் குமுறி எதிர்ப்பினைப் பதிவு செய்தவர்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் உள்பட தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளை மிக பிரம்மாண்டமான முறையில், எழிலையும் எழுச்சியையும்  கூட்டி, நடத்திக்காட்டி அனைத்து உடன்பிறப்புகளின் உள்ளங்களிலும் உயர்வான இடம் பெற்றவர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழாவினையும், அதனையொட்டி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தினையும், அகில இந்தியத் தலைவர்கள் பலரும் வியந்து போற்றிடும் வண்ணம் நடத்திக் காட்டியவர். திமுக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றம் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க  உடன்பிறப்பாக கடைசிமூச்சுவரை கட்சியை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.

திமுக தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் தொண்டராக, மக்கள் நலனில் மாறாத அக்கறை கொண்டு செயலாற்றும் பொதுநலவாதியாக, தன் உயிரைவிட பட்டினிச்சாவினால் உயிரிழப்புகள் ஏற்படாதபடி காப்பதே முதன்மையானது என்கிற லட்சிய உறுதியுடன் சளைக்காமல் களப்பணியாற்றி, திமுக என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை, தன்னுடைய உயிரை ஈந்து தமிழ் மண்ணுக்கு நிரூபித்துள்ள ஜெ.அன்பழகனுக்கு இந்தக் கூட்டம் வீரவணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்திற்குக் திமுக என்றும் துணை நிற்கும் என்ற உறுதியுடன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி, தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சிசுந்தரம், நாகை மாவட்ட  முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணன், பேராசிரியர் அன்பழகன் மகள்  மணமல்லி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.



Tags : JM Anubhagan ,DMK , DMK.proven . people's welfare movement. ever.
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்