திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பிராமண கண்மாய் குடிமராமத்துப் பணி சம்மந்தமாக கலெக்டரை சந்திக்க கிராம மக்கள் சரக்கு வாகனத்தில் சமூக இடைவெளியை மறந்து வந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. நாடு முழுவதும் உயிர்பலி வாங்கி வரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. தற்போது கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வரும் வேளையில்,
கண்மாய் குடிமராமத்து பணி சம்மந்தமாக இரு குழுக்களிடையே சமாதான பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பிராமணம்பட்டி ஊராட்சிக்கு நேற்று வந்தார். பேச்சுவார்த்தையில் பங்கேற்க குண்டேந்தல்பட்டி கிராம மக்கள் 25க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக அமர்ந்து பிராமணம்பட்டிக்கு வந்தனர். காவல்துறை மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் இப்பயணத்தை கண்டு கொள்ளாமல் இருந்தது கொரோனா பரவலுக்கு வழிவகுப்பதாக இருந்தது. அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களும் தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தால்தான் நோய்த்தொற்று பரவலிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.