டெல்லி : கொரோனா விவகாரத்தை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் இந்திய மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ள அவர், நிலைமை கைமீறி போன பின், எடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்த பலனும் தராது எனக் கூறியுள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்த பண புழக்கத்தை மத்திய அரசு உறுதி செய்யாவிட்டால், நடுத்தர மக்கள் ஏழை மக்களாகி விடுவர், ஏழை மக்கள் மேலும் கொடிய வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என ராகுல் காந்தி ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரு முதலாளிகளின் கைகளில் நாட்டின் பொருளாதாரம் சென்றுவிடும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் 3 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனின் வரைபடத்தை வெளியிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார்.மத்திய அரசு செயல்படுத்திய 4 கட்ட லாக்டவுனின் வரைபடத்தையும் வெளியிட்டு ஒவ்வொரு வரைபடத்திலும், கொரோனா பாதிப்பு ஒவ்வொரு லாக்டவுனிலும் எவ்வாறு உயர்ந்து வந்தது என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படங்கள் அமைந்தன.