சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனியின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பழனி. இவர், குன்றத்தூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே அதிமுக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் ஏழை எளிய மக்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். கொரோனா தொற்று அதிகமாக உள்ள குன்றத்தூர், மாங்காடு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிவாரணம் வழங்கினார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனிக்கு கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் அதிகமானதால், சென்னை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்யபட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எம்எல்ஏ பழனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனியின் உடல்நிலை குறித்து அவரது மகன்கள் செல்வம், வினோத்திடம் தொலைபேசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். எம்எல்ஏ பழனிக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். எம்எல்ஏ பழனியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார். தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பழனியிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தான் நலமாக இருப்பதாக முதல்வரிடம் தெரிவித்த எம்எல்ஏ பழனி, முதல்வர் பழனிசாமிக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.