×

மருத்துவ படிப்பில் பி.சிக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பிரதமருக்கு பாஜ தேசிய தலைவர் அழுத்தம் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு பிரதமருக்கு, பாஜ தேசிய தலைவர் நட்டா அழுத்தம் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:‘இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் மோடியும், பாஜ கட்சியும் உறுதியாக இருக்கிறது. சமூகநீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு பிரிக்க முடியாதது‘ என்று பாஜ கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்திருப்பது, ஆச்சரியம் அளித்தாலும், மிகவும்  மகிழ்ச்சி தருகிறது. லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், ‘இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்’ என்றும்; “இடஒதுக்கீடு அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை” என்றும்  ஆணித்தரமாக அறிவித்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.  இந்த நேரத்தில்,  மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 12.5.1989-ல் கொண்டு வந்து நிறைவேற்றிய சிறப்புத் தீர்மானத்தின் முக்கியமான பகுதியை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.

 அந்தத் தீர்மானத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆம் விதியில் கூறப்பட்டுள்ளவாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4) 16(4) பிரிவுகளின் கீழ் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டினையும், சிறப்பு விதிகளையும் சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவினர் முன்னேறத்திற்காகச் செயல்படுத்துவதில் மத்திய அரசு பெரும்பங்கு வகிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் முதல்வராக கலைஞர், அன்றைய மத்திய அரசுக்கு  நினைவூட்டிய இந்த வரிகள் மத்திய பாஜ அரசுக்கு அப்படியே நிச்சயமாகப் பொருந்தும். சமூகநீதியைத் தரம் தாழ்த்திடும்  விதத்தில், கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் பொருட்டு, ‘நீட்’ தேர்வை அவசரகதியில் திணித்தது மட்டுமின்றி, கடந்த மூன்றாண்டுகளாக மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களிலும், 15 சதவீத இளநிலைப் படிப்பிற்கான (எம்.பி.பி.எஸ்) இடங்களிலும், சமூகநீதியை மத்திய பாஜ அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.  
 குறிப்பாக மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்துள்ள 9,550 முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 371 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இது அப்பட்டமான சமூக அநீதி மட்டுமல்ல, அரசியல் சட்டம் அங்கீகாரம் செய்து - உச்ச நீதிமன்றமே உறுதி செய்த சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.

 ஆகவே, நட்டா குறிப்பிட்டுள்ளவாறு,  “பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜவும் உறுதியாக இருப்பது” உண்மையெனில், இப்போதுகூட காலம் கடந்துவிடவில்லை, நடந்து முடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை ரத்து செய்து விட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள - அரசியல் சட்ட ரீதியான சமூகநீதியை நிலைநாட்டிட- மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் மற்றும் இளநிலைப் (எம்.பி.பி.எஸ்) படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாகச்  செயல்படுத்திட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு ஆணையிடுமாறு பிரதமர் மோடியை, பாஜ தேசியத் தலைவர் நட்டாவை வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், அதற்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து இடஒதுக்கீடுகளையும், இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், நட்டாவையும், மத்திய பாஜ அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சமூக நிலையிலும்,
கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவினர் முன்னேறத்திற்காகச் செயல்படுத்துவதில் மத்திய அரசு பெரும்பங்கு வகிக்க வேண்டும்



Tags : MK Stalin ,Baja , reservation ,,insists
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...