×

நீண்ட நேரம் டிவி பார்த்ததை கண்டித்ததால் தற்கொலை நாடகமாடிய சிறுவன் பரிதாப சாவு: விளையாட்டு விபரீதமானது

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த பிள்ளையார்பாளையம், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம். நெசவு தொழிலாளி. இவருக்கு, ஜெயச்சந்திரன் (13) உள்பட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏகாம்பரத்தின் 3 குழந்தைகளும் வீட்டின் ஒரு அறையில் தூங்காமல் நீண்ட நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது தாய் இதை கண்டித்துள்ளார். இதனால், மூத்த மகளும், கடைசி மகனும் அந்த அறையில் இருந்து வெளிேய வந்து விட்டனர். ஜெயசந்திரன் மட்டும் தொடர்ந்து டிவி  பார்த்துள்ளான். இதை பார்த்த அவனது தாய், அவனை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஜெயசந்திரன், பெற்றோரை பயமுறுத்துவதற்காக துணியை கழுத்தில் மாட்டி கொண்டு, நெசவு செய்யும் கருவி மீது ஏறியுள்ளான்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி விழுந்ததில், கழுத்தில் இருந்த துணி இறுகி கம்பியில் தொங்கினான். சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ஜெயசந்திரனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஜெயசந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டதும் பெற்றோர் தரையில் விழுந்து கதறி அழுதனர். புகாரின்படி சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



Tags : Suicide drama boy , condemned ,watch TV , Death, disastrous
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...