காத்மண்டு: நேபாளத்தில் புதிய அரசியல் வரைபடத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில் அரசியல் அமைப்பு திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில், இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லிபுலேக் கணவாய் உள்ளது. இப்பகுதிக்கு செல்வதற்காக 80 கிமீ நீளமுள்சள எல்லையோர சாலையை இந்தியா அமைத்துள்ளது. இதை கடந்த மே 8ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பகுதி தனக்கு சொந்தமானது என அந்நாடு கூற, இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்னை தலை தூக்கியது.
இதைத் தொடர்ந்து, நேபாள அரசு தனது நில பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியாவின் எல்லைப் பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி ஆகியவற்றை நேபாள அரசு தனக்கு சொந்தமான எல்லைப் பகுதியாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தனது அரசியல் வரைபடத்தை புதுப்பிப்பதற்காக அரசியலைமைப்பு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், மசோதாவை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும். நேபாள காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா கட்சி-நோபளம் மற்றும் ராஷ்டிரிய பிரஜன்தரா கட்சி உள்ளிட்டவை அரசின் மசோதாவை ஆதரித்து வாக்களித்ததை அடுத்து இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நேபாளத்தின் இந்த செயலால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.