×

சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றிய கையோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: “சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும்  துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சுகாதாரத் துறைச் செயலாளர் பதவியிலிருந்து பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டு, ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அதிமுக அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், அதில் உள்ள அரசியல், சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதால்தான், 11 பேர் கொண்ட சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தான் சுகாதாரத்துறைச்  செயலாளர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானது.

நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் அதே நேரத்தில், பரிசோதனைகள் குறித்தும், தனிமைப்படுத்துதல் குறித்தும் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளே வெளியிடப்பட்டு வருகின்றன.  ‘வீட்டில் ஒருவருக்குக் கொரோனா என்றாலும் குடும்பத்தினர் அனைவரும் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்’, ‘கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாள் தனிமை’ என்றெல்லாம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து, பொதுமக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய  நிலையில் அடுத்த சில மணித்துளிகளில் சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அதனை மறுத்து, விளக்கம் என்ற பெயரில் மேலும் குழப்பமான பேட்டிகளை அளிக்கிறார்.

அதுபோலவே, சென்னையில் 20 ஆயிரம் படுக்கைகள் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்த நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில், 17 ஆயிரம் படுக்கைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் இருப்பது ஏன்? உண்மைகள் உறங்கும் போது தானே, முரண்பாடுகளுக்குச் சிறகுகள் முளைக்கும்? ஆலோசனைகளையும் முடிவுகளையும் யார் எடுக்கிறார்கள்? சுகாதாரத்துறையின் கைகளை மீறி-அதன் அதிகார எல்லையைப் புறக்கணித்துச் செயல்படுகிறார்களா?.

சுகாதாரத்துறையில் அமைச்சர்-அதிகாரிகளிடையே குழு மனப்பான்மைப் போட்டியினால்,  இந்தக் குழப்பங்களா? எடப்பாடி பழனிசாமிக்கு மேலே, அவரை விஞ்சிய “சூப்பர்” முதல்வர்களின் கைகளில் நிர்வாகம் இருக்கிறதா?  குழுக்களாக, வெவ்வேறு திசை நோக்கிச்  செயல்படும் இந்த அரசியல்-அதிகாரப் போட்டிக்கும், ஊழல்களுக்கும் அப்பாவி மக்களின் உயிரை அநியாயமாக கொரோனாவுக்கு பலிகடா ஆக்குவதா எனப் பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.  பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர், ஜூலை மாதத்தில் நோய்த்தொற்று பரவல் மேலும் கடுமையாக இருக்கும் என அரசின் சார்பில் தெரிவிக்கிறார். முதலமைச்சரோ, சமூகப் பரவல் இருந்தால் நீங்களும் நானும் இப்படி இருக்க முடியுமா என ஊடகத்தினரிடம் ஏகடியம் பேசியபடி, அவரே அறிவித்த பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணியாமல், இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், கட்சிக்காரர்கள் அதிகாரிகளுடன் கூடி  நின்று, அணை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிற பேரிடர் சூழலில் இனியேனும், முறையான - வெளிப்படையான தன்மையுடன் செயல்பட்டு, பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்துவதுடன், எத்தனை நோயாளிகள் - எவ்வளவு பரிசோதனைகள்-எத்தனை மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த இக்கட்டான கட்டத்தில், பேரிடர் தணிப்புப் பணிகளில், அடிப்படை  ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே குளறுபடிகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள். முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட, சுகாதாரத் துறையை முதலமைச்சர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்வைக்கப்படும் கருத்தும் அலட்சியப் படுத்தப்படக்கூடியதல்ல! இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijay Bhaskar ,MK Stalin ,Secretary of Health ,Health Secretary , Minister Vijay Bhaskar, replaced , Health Secretary, MK Stalin's statement
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...