சென்னை: டாஸ்மாக் கடைகளில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அளித்துள்ள விளக்கம்: அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தேவையான ஒரு 500 மிலி சானிடைசர் மற்றும் மூன்று அடுக்கு கொண்ட முகக்கவசம் இரண்டு என ஒவ்வொரு கடை பணியாளர்களுக்கும் கடந்த மாதம் முதல் அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டது. இது தவிர கடை பணியாளர்களுக்கு முப்பது முறை துவைத்து உபயோகப்படுத்த கூடிய இரண்டு முகக்கவசம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ஒரு கடைக்கு 5 லிட்டர் கேனில் கிருமி நாசினி திரவம் என அனைத்து மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அனைத்து கடைகளுக்கும் விநியோகிக்க 5 லிட்டர் கேனில் கிருமி நாசினி ஜூன் மாதத்தில் வழங்கிடுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2 தரமுள்ள கையுறை, ஒரு முகத்திரை விநியோகிக்கப்பட்டுள்ளது. கடைபணியாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 முறையாவது கிருமி நாசினி உபயோகித்து கடையினை சுத்தப்படுத்த வேண்டும். கடைகளின் முன்பு வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான செலவினங்கள் அனைத்தும் டாஸ்மாக் நிறுவனமே ஏற்கும் என அனைத்து கடை பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.