மதுரை: தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டி (68). மும்பையில் இருந்த இவர், மனைவி இறந்ததை தொடர்ந்து தமிழகம் வந்தார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது பிள்ளைகள் ஏற்க மறுத்ததால் சாமியார் வேடம் பூண்டு, ஒவ்வொரு ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். 3 மாதங்களாக மதுரையில் முகாமிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் இவரால் வெளியூர் செல்ல முடியவில்லை. மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பிச்சையெடுத்து, அதில் சேர்த்த ரூ10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக, கடந்த மாதம் 18ம் தேதி மதுரை கலெக்டரிடம் வழங்கினார்.
2வது முறையாக கடந்த 6ம் தேதி ரூ10 ஆயிரம், 3வது முறையாக நேற்று மீண்டும் ரூ10 ஆயிரத்தை நிவாரண நிதியாக கலெக்டர் வினயிடம் வழங்கினார். இதுகுறித்து பாண்டி கூறுகையில், ‘‘பிச்சையெடுப்பதில், எனக்கு சாப்பாட்டிற்கு போக மீதியுள்ள பணத்தை சேர்த்து, முன்பு அரசு பள்ளிகளுக்கு நிதியாக வழங்கினேன். இதுபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு வழங்கியுள்ளேன். தற்போது சேர்ந்த பணத்தை கொரோனாவிற்கான நிதியாக வழங்கியுள்ளேன்’’ என்றார்.