சென்னை: தமிழகம் முழுவதும் கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,524 கிராமங்களுக்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டது. ரூ.1,950 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் பெரும்பாலான நிறுவனங்கள் கலந்துகொண்டாலும், குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டிருப்பதாக திமுக குற்றசம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு முறைகேட்டில் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் முதல்வர் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் விருப்பத்திற்கினங்க டெண்டர் ஒதுக்கும்படி தொழில்நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு மற்றும் தனியார் நிறுவன இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனுவானது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.