டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கு மோட்டார் அல்லாத போக்குவரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் பல நாடுகளையும் திணறவைத்து வருகிறது. தொடர்ந்து இந்த வைரஸினை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பலர் போராடி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கு மோட்டார் அல்லாத போக்குவரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள், பொதுப்போக்குவரத்துக்கு மாற்றாக தனியான போக்குவரத்தையே விரும்புகின்றனர்.
இதனால் மிதிவண்டி உள்ளிட்ட மோட்டார் அல்லாத போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், புத்துயிரூட்டவும், மாநில அரசுகளுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, நியூயார்க்கில் மிதிவண்டிகளுக்காக 40 மைல் தொலைவிற்கு புதிய பாதைகள் அமைத்துள்ளதையும் ஓக்லாந்தில் 10 விழுக்காடு தெருக்களில் மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளதையும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கொலம்பியாவின் போகோட்டா நகரில் ஒரே நாளில் 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மிதிவண்டி பாதை அமைத்ததையும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பொது போக்குவரத்தில் பணமில்லாப் பரிமாற்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்தவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.