×

கொரோனாவை வென்ற 97 வயது முதியவர் : நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அதிக வயதுடைய நபர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 14,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக உள்ளது.

இதனிடையே சென்னையில் 97 வயது முதியவர் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்தது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளான 97 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார். வைரஸ் தொற்றுக்கான தீவிர அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதியவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று நீங்கியது உறுதியானதால் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அதிக வயதுடைய நபர் இவர் ஆவார். நாள்பட்ட நோய்கள் இருந்தாலும் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மூலம் முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடரும் நிலையில், 97 வயது முதியவர் ஒருவர் கொடிய வைரஸிடம் இருந்து மீண்டு இருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Corona ,country ,survivor , Corona, 97 years old, old, country, corona, high age, person
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!