கம்பம்: கேரளாவில் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கினால், தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் போடி பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த மழை இப்பகுதி விவசாயிகளுக்கு கை கொடுக்கும். இந்தாண்டு ஜூன் 1ல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் மையம் அறிவித்தது. இதனால், கம்பம் பகுதியில் மலையடிவாரத்தில் எள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஜூன் மாதம் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், இன்னும் சொல்லிக் கொள்ளும்படியாக மழை பெய்யவில்லை.
கம்பம் பள்ளத்தாக்கில் வெயிலின் தாக்கம் குறைந்தாலும், சாரல் மழை இன்னும் தொடங்கவில்லை. இதனால், கம்பமெட்டு அடிவாரப் பகுதியில் எள் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். போதிய மழை இல்லாவிடில் எள் சாகுபடி முழுப்பலன் தராது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘80 கிலோ எள் மூட்டைக்கு ரூ.8,500 வரை விலை கிடைக்கும். இந்தாண்டு போதிய மழை இல்லாததால், எள் விளைச்சல் குறைவாக இருக்கும். இன்னும் ஓரிரு நாட்களில் மழை தொடங்கினால் நன்றாக இருக்கும்’ என்றனர்.