பெரியகுளம்: பெரியகுளம் அருகே காட்டுமாடு தாக்கி விவசாயக் கூலித்தொழிலாளியில் குடல் சரிந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் (55). கும்பக்கரை பகுதி செலும்பு என்னும் இடத்தில் உள்ள மாந்தோப்பில் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தோப்பில் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற காட்டுமாடு ஒன்று, நீலகண்டனின் வயிற்றில் கொம்பால் குத்தி சாலையோரத்தில் தூக்கி வீசியது. இதில், அவரது குடல் சரிந்தது.
அக்கம்பக்கத்து தோட்டத்தினர் படுகாயம் அடைந்த கூலித்தொழிலாளியை மீட்டு, 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து நீலகண்டனை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்து, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சீரியஸான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் மற்றும் தேவதானப்பட்டி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.