வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒஹியோ பல்கலைக்கழக பேராசிரியரும், மண்வள ஆய்வாளருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரத்தன் லால், வேளாண் துறையின் நோபல் பரிசாக கருதப்படும் உலக உணவு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், விவசாய நிலங்களில் மண்ணின் தரத்தை வளப்படுத்தி, உலகளவில் உணவு விநியோக சங்கிலியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட உள்ளது. ரத்தன் லால், தனது 50 ஆண்டு கால பணியில், 50 கோடிக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில், புதுமையான மண் தரத்தை பாதுகாக்கும் நுட்பத்தை ஊக்குவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘அரியானா, பஞ்சாப், உபி போன்ற இந்திய நகரங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதை மக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். நிலத்திலிருந்து எல்லாவற்றையும் நாம் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. பூமியிலிருந்து எதை எடுக்கிறோமோ அதை திருப்பி தர வேண்டும்,’’ என அறிவுறுத்தி உள்ளார்.