×

வெளி நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கி தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு கடந்த 5ம் தேதி அறிவித்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60,942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
 மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமான போக்குவரத்து துவங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தில் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்தும் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும் திமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

 இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான இந்தியர்களும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் வெளிநாடுகளில் சிக்கத் தவித்து வருகிறார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு வருகிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு அவர்கள் வர விமான சேவை இல்லை என்றார்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள், இதுவரை இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை, சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதேபோல, தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க எத்தனை விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகள் மீது எடுத்த முடிவுகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க எத்தனை விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகள் மீது எடுத்த முடிவுகள் என்ன?

Tags : Tamils ,Central ,countries ,State ,Governments ,State Governments , rescue Tamils , trapped , foreign countries ?:, Central, State Governments
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!