மேட்டுப்பாளையம்: கோவை-நீலகிரி இடையே மலைப்பாதைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் கல்லார் ஆற்றில் தண்ணீர் குடிக்கவும், உணவுக்காகவும் வரும் காட்டுயானைகள் நீண்ட நேரம் காத்திருந்து சாலையை கடந்து மீண்டும் மலைப்பகுதிக்கு செல்கின்றன. நேற்று கல்லார் மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று தண்ணீர் குடித்துவிட்டு மலைமீது செல்வதற்காக சாலையை கடக்க அரை மணி நேரம் காத்து நின்றது. அந்த வழியாக வந்தவர்கள் வாகன போக்குவரத்தை நிறுத்தி யானை கடந்து செல்ல உதவி செய்தனர். இதைத்தொடர்ந்து யானை சாலையை கடந்து மலைப்பகுதிக்கு சென்றது.
வனத்துறையினர் கூறுகையில், ‘‘பலாப்பழ சீசனால், கல்லார் முதல் குன்னூர் வரை மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாடுகின்றன. எனவே வாகனங்களில் செல்வோர் வனவிலங்குகளை பார்க்க நேரிட்டால் செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கவோ, அருகில் செல்லவோ முயற்சிக்கக்கூடாது. மேலும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் அவை பாதையை கடக்க வாகனங்களை நிறுத்த வேண்டும்’’ என்றனர்.