×

கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் கொரோனா அரக்கன் பிடியில் இருந்து தப்பிய 9 நாடுகள்!

கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் இதுவரை 9 நாடுகள் கொரோனா பிடியில் இருந்து தப்பியுள்ளன. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகளவில் 75.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 38.4 லட்சம் பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதற்கிடையில், உலகின் 9 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகளாக மாறியுள்ளன.

நியூசிலாந்து

கொரோனா பிடியில் இருந்து தப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க நாடாக நியூசிலாந்து உள்ளது. வெறும் 48.9 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடான இங்கும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுமார் 75 நாட்கள் ஊரடங்கை கடுமையாக பின்பற்றப்பட்டது. மேலும், அந்த காலக்கட்டத்தில் தொடர் பரிசோதனைகளும் அதற்கேற்ற துரித சிகிச்சைகளும் கொரோனா அரக்கனிடம் இருந்து எளிதில் வெல்ல உதவியது. நியூசிலாந்தில் கடைசியாக மே 22ம் தேதிக்கு பிறகு ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. கடைசி நோயாளியும் ஜூன் 8ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். மொத்தம் 22 இறப்புகள் உட்பட 1,504 பேர் பாதிப்புகளுடன் கொரோனா வென்ற நாடானது நியூசிலாந்து.

தான்சானியா

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த ஆறு வாரங்களுக்கு முன், புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்கள் வெளியிடுவதை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடவுளின் அருளால் கொரோனாவை ஒழித்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி சமீபத்தில் அறிவித்தார். தான்சானியாவில் 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 29 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஃபிஜி தீவு

தென் பசிபிக் தீவான ஃபிஜியில் 9 லட்சம் பேர் வாழ்கின்றனர். அங்கு இதுவரை 18 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தி, எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து விட்டனர். தொடர்ந்து 45 நாட்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாததால், 100 சதவீதம் குணமடைந்துவிட்டதாக பிரதமர் பிராங் பைனிமாரமா அறிவித்தார்.

வாடிகன்

குட்டி நாடான வாடிகனில் மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் கடைசி நோயாளியும் குணமடைந்ததை அடுத்து கடந்த 4ம் தேதி கொரோனா இல்லாத நாடாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் மாட்டோ ப்ருனி அறிவித்தார். கொரோனா முழுவதும் ஒழிந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரே செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தினார்.

கிழக்கு திமோர், பபுவா நியூகீனி

கிழக்கு திமோர் மற்றும் பிசிபிக் நாடான பபுவா நியூகீனி ஆகிய இரண்டு நாடுகளிலம் தலா 24 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்களும் முழுவதுமாக குணமடையவே கொரோனா இல்லாத நாடுகளானது.

மான்டிநெக்ரோ

ஐரோப்பிய நாடான மான்டிநெக்ரோவில் மொத்தம் 324 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். அந்நாடு, முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 69வது நாளில் கொரோனாவை ஒழித்து சாத்தியப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழித்த முதல் ஐரோப்பிய நாடாக மான்டிநெக்ரோ திகழ்கிறது.

கிட்ஸ் அண்டு நெவிஸ்

மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கிட்ஸ் அண்டு நெவிஸில் மொத்தமே 15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் ஆவர். அனைத்து நோயாளிகளும் கடந்த 19ம் தேதியே குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

சீசெல்ஸ்

இந்தியப் பெருங்கடலில் 115 குட்டி தீவுகளைக் கொண்ட சீசெல்ஸ் கடந்த மே 18ம் தேதியே கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அங்கு, வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : countries ,Corona Demon Nine ,Clutches of the World , Corona, World Nations, 9 Nations, New Zealand, Vatican, Fiji
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...