×

எருது விடும் விழாவில் பரிசுகளை வென்ற காளையை மரத்தில் மோத வைத்து கொன்ற வாலிபர்: வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வசிப்பவர் வெற்றிவேல் (35). கிராம நிர்வாக அலுவலர். இவரது காளை  எருது விடும் விழாக்களில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று தந்துள்ளது. அதை தனி கொட்டகை அமைத்து வளர்த்து வந்தார். கடந்த 5ம் தேதி மாலை, கொட்டகை அருகில் மரத்தில் கட்டப்பட்டு இருந்த காளை கொம்பு ஒன்று உடைந்தும், வாய் பகுதியில் ரத்த காயங்களுடனும் படுத்து கிடந்துள்ளது. உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்தார். அவர் நாமக்கல் அல்லது சென்னை கால்நடை ஆராய்ச்சி மருத்துவ மையத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் காளை பரிதாபமாக இறந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வாட்ஸ் அப்பில் அவருக்கு ஒரு வீடியோ வந்துள்ளது. அதில், மதுபோதையில் இருந்த இளைஞர் அந்த காளையை சீண்டுவதும், முட்ட வரும்போது, ஓடிவிடுவதும், அவ்வாறு வரும் காளை மரத்தில் மோதி கீழே விழுவதுமாக இருந்துள்ளது. நீண்ட நேரமாக இது தொடரவே காளை மரத்தில் மோதி காயம் ஏற்பட்டு கொம்பும் உடைந்துள்ளது. மர இடுக்கில் சிக்கிய கொம்பை பிடித்து அந்த இளைஞர் இழுத்து வம்பு செய்வதும், நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த காளை வாயில் ரத்த காயத்துடன் மயங்கி விழுந்ததை பார்த்து சிரித்தபடி சென்றதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு காளையை கொடுமை செய்வதை மற்றொரு இளைஞர் செல்போனில் படம் பிடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது கிருஷ்ணகிரி பகுதியில் வைரலாகி வருகிறது.


Tags : buffalo celebration ,woods , Bull, plaintiff, whats up, video
× RELATED காடுவெட்டியில் பதற்றம்; குரு மகன்,...