பெங்களூரு: தாடி மற்றும் மீசை அதிகம் வளர்ப்பதால், கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக் கொள்ளும் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் சலூன் கடைகள் மூடப்பட்டதால் குறிப்பிட்ட சிலர் மட்டும் வீடுகளில் செல்ப் ஷேவிங் செய்து கொண்டு வருகிறார்கள். பெரும்பான்மை ஆண்கள் முடி வெட்டாமலும் தாடி ஷேவிங் செய்யாமல் உள்ளனர். மீசையும் தாடியும் அதிகமாக வளர்ந்துள்ளதால், அதை அழகுப்படுத்தியும் வருகிறார்கள். இது பார்ப்பதற்கு கவர்ச்சியாக தெரிந்தாலும் கொரோனா வைரஸ் கைகூப்பி அழைக்க வழி வகுத்து விடும் என்பது நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாக்க தற்போது ஒரே கருவியாக இருப்பது மாஸ்க் மட்டுமே. வாய், மூக்கு பகுதியை முழுமையாக மாஸ்க் மூலம் மூடி கொள்வதால் வைரஸ் உடலில் செல்வதை தடுத்து வருகிறோம். தாடி மற்றும் மீசை அதிகமாக இருக்கும் போது, மாஸ்க் அணிந்தால், அது முழுமையாக மூக்கு, வாய் நுழைவுகளை மூடாமல் இடைவெளி ஏற்படுத்துகிறது. அப்போது காற்றின் வழியாக வரும் வைரஸ் சுலபமாக முடியில் அமரும். அந்த சமயத்தில் தாடி மற்றும் மீசை மீது கை விரல்கள் படும்போதும், அதே விரல்கள் கண், காது, வாய், மூக்கு தொடும்போது, சுலபமாக உள்ளே செல்ல வழி வகுத்து விடும். எனவே தாடி வளர்க்கக்கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.