சென்னை: கொரோனா தொற்று பரவல் குறையாததால், 10ம் வகுப்பு தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் உள்பட, இந்திய மாணவர் சங்க நிர்வாகி மாரியப்பன், ஈரோட்டைச் சேர்ந்த மாணவியின் தந்தை மாரசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்தனர்.