×

புதுகை சிறுமி நரபலி விவகாரத்தில் கைது பெண்களை வசியம் செய்து தருவதாக ஆண்களிடம் ஆயிரக்கணக்கில் வசூல்: பெண் மந்திரவாதி உதவியாளர் வாக்குமூலம்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர்  பன்னீர்செல்வம் (50). இவர் மகள் வித்யாவை (14), 2வது மனைவி மூக்காயி, உறவினர் குமார் ஆகியோருடன் சேர்ந்து நரபலி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பன்னீர்செல்வம், குமார் கைது செய்யப்பட்டனர். மூக்காயி மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதற்கிடையில் நரபலி கொடுத்தால்  நிைறய செல்வம் கிடைக்கும் என்று அவரிடம் கூறிய பெண் மந்திரவாதி வசந்தி(46) மற்றும் அவரது உதவியாளர் முருகாயி ஆகியோரை போலீசார் பிடித்து 5 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் வசந்தி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். முருகாயி நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த 6 நாட்களாக மந்திரவாதி உதவியாளர் முருகாயியிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பற்றி தனிப்படை போலீசார் கூறியதாவது: மந்திரவாதி வசந்தி வசியம் செய்வதை தொழிலாக கொண்டு செயல்பட்டுள்ளார். பிறரை முடக்குவது, தொழில்களில் நஷ்டமடைய செய்வது, கை, கால்களை இழக்க வைப்பது, பெண்களை ஆண்களுக்கு வசியம் செய்து கொடுப்பது என செயல்பட்டுள்ளார்.

இதற்கு கூலியாக ரூ.10 ஆயிரம் மற்றும் பொருட்கள் பெற்று வந்துள்ளார். அவரிடம் இருந்து பாஸ்போர்ட் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்களில் உள்ளவர்களை தனது மாந்திரீகம் மூலம் வசியம் செய்துள்ளார்.
பெண் மந்திரவாதியுடன் பன்னீருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததால் தனது பணத்தேவையை தீர்க்க ஆலோசனை கேட்டபோது நரபலி விவரத்தை கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரிக்க மந்திரவாதி வசந்தி, பன்னீர்செல்வம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



Tags : men ,women , Thousands,men charged, arresting women ,Pudukkai girl case
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்