புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஆன்லைனில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3வது வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கூட்டத் தொடரில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்பதால் இரு அவைகளிலும் அனைத்து எம்பிக்களும் அவைக்கு வருவது இயலாத காரியமாகும். சமூக இடைவெளியுடன் மக்களவை அறையில் 60 உறுப்பினர்களை மட்டுமே அமர வைக்க முடியும். மைய மண்டபத்தில் 100 பேரை மட்டுமே அமர வைக்க முடியும். எப்படி பார்த்தாலும் மொத்தமுள்ள 543 எம்பிக்களில் 245 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும்.
எனவே, ஆன்லைன் மூலமாக கூட்டத் தொடரை நடத்தலாமா, அன்றைய அலுவலுக்கு அவசியமாக இருக்க வேண்டிய எம்பிக்களை மட்டும் நேரில் வரவழைத்து மற்றவர்களை ஆன்லைன் மூலமாக கூட்டத் தொடரில் பங்கேற்க வழி வகை செய்யலாமா என்பது குறித்து மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓர் பிர்லா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு அரசு செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.