×

ஜெ.அன்பழகனின் மறைவு ராணுவ வீரரின் தியாகத்துக்கு இணையானது: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனின் மறைவு, நாட்டுக்காக போராடி உயிரிழந்த ராணுவ வீரனின் தியாகத்துக்கு இணையானது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவையொட்டி, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு ஒன்றையும், காணொலி காட்சி ஒன்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த ராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, கொரோனா தடுப்புப் பணிக்காகப் போராடி உயிரிழந்த என் சகோதரர் ஜெ.அன்பழகனின் தியாகம், அவரது தியாக வாழ்வைப் போற்றுவோம். திராவிட இயக்கம் மறவாது ஜெ.அன்பழகனின் திருமுகத்தை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காணொலி காட்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என் இதயத்தில் இடிபோல் இறங்கிய அந்தச் செய்தி, இன்று காலையில் வந்தது. எப்போதும் நான் “அன்பு... அன்பு” என்று அழைக்கும் என்னுடைய ஆருயிர் சகோதரன் அன்பழகனை இழந்து நிற்கின்றேன். என்னுடைய இளமைக்காலம் முதலே, என்னோடு தோளோடு தோள் நின்ற தோழன், ஜெ.அன்பழகன். தியாகராயர் நகரில் வாழ்ந்த தீரன். கலைஞருக்கு தளபதியாய் இருந்த பழக்கடை ஜெயராமனின் மகன். எமர்ஜென்சியில் நாங்கள் கைதான போது, பழக்கடை ஜெயராமனும் கைதானார். சென்னையில் திமுக போர்ப்படைத் தளபதி என்று பழக்கடை ஜெயராமனை சொல்வார்கள். அப்பாவைப் போலவே அன்பழகனும் திமுகவுக்கு சென்னையில் கிடைத்த போர்ப்படை தளபதியாகவே திகழ்ந்தவர். செயல்வீரனாக மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சிங்கமென கர்ஜிப்பார். அந்தக் காட்சி இப்போதும் என் கண்களில் நிழலாடுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அன்பு எழுந்தாலே ஆளுங்கட்சியினர் அனைவருமே பயத்தால் நடுங்குவார்கள். அவருக்குப் பதில் சொல்லப் பயப்படுவார்கள். தான் நினைப்பதை யாருக்கும் பயப்படாமல் துணிச்சலுடன் எடுத்துரைப்பவர்.

முந்தைய ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டு ஊர் ஊராக அலைக்கழிக்கப்பட்டபோது கூட அவரது மன உறுதியைக் குலைக்க முடியவில்லை. தன் உடல்நிலையைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் உற்சாகத்துடன் தொய்வே இல்லாமல் பணியாற்றியவர் அன்பழகன். தலைமைக் கழகத்தால் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டால், அதனைத் தலைநகர் சென்னையில் கம்பீரமாக நடத்திக் காட்டுபவர்தான் என் அன்பழகன். அவர் போடும் மேடைகள் எல்லாம் காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த மேடைகளும் அன்பழகனைப் போலவே கம்பீரமாக இருக்கும். இந்த கொரோனா தொற்றுக் காலத்திலும் சளைக்காமல் பணியாற்றினார். என்னை, ‘அதிகமாக வெளியில் போகாதீர்கள்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவரது உடல்நிலை பற்றி எனக்குத் தெரியும். அதனால் அவரையும் நான் “அதிகம் அலையாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளைக் கவனியுங்கள்” என்று அன்புவிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தேன்.

ஆனாலும் எல்லா இடங்களுக்கும் அவரே போய் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பாழாய்ப்போன கொரோனா என் அன்பழகனையும் தொற்றிவிட்டது. நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு இணையானது, கொரோனா தடுப்புப் பணிக்காகப்  போராடி உயிரிழந்த என் சகோதரன் அன்பழகனின் தியாகம். ஒருநாளைக்கு எத்தனை தடவை என் அன்புவிடம் பேசுவேன். இனி அன்புவிடம் எப்படிப் பேசுவேன்? அன்பழகன் மட்டுமல்ல, அவருடைய மொத்தக் குடும்பமும் திமுக குடும்பம் தான். அவர்கள் அனைவருக்கும் நான் எப்படி ஆறுதல் சொல்வேன். உடன்பிறப்புகள் அனைவருக்கும் எப்படித் தேறுதல் சொல்வேன். எங்கே காண்பேன் என் அன்பை, எனக்கு நானே எப்படித் தேறுதல் சொல்லிக்கொள்வேன். திமுகவின் தீரமிக்க உடன்பிறப்பு ஜெ.அன்பழகனின் தியாக வாழ்வைப் போற்றுவோம். திராவிட இயக்கம் மறவாது உன் திருமுகத்தை.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் திமுக பலம் 97ஆக குறைவு

தமிழக சட்டப்பேரவையில் திமுக பலம் 100 ஆக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். பிப்ரவரி 28ம் தேதி குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இந்நிலையில், சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை 8.05 மணிக்கு மரணம் அடைந்தார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 97 ஆக குறைந்துள்ளது.

Tags : demise ,MK Stalin ,soldier , demise , J.Abalanka parallels, sacrifice , soldier: MK Stalin's speech
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...