திருப்பதி: உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 83 நாட்களுக்கு பிறகு பொது தரிசனம் தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடந்தது. ஆனால், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று கோயில், தேவாலயங்களில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடந்தப்பட்டது. கடந்த 80 நாட்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, சில நிபந்தனைகளுடன் கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுடன் திறக்கப்பட்டது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் 78 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயில் ஊழியர்களுக்கு மட்டும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.