பாட்னா: பீகாரை சேர்ந்த அக்தர் இமாம் என்பவர், தான் வளர்த்து வரும் இரண்டு யானைகளுக்கும் தனது சொத்தில் பாதியை எழுதி வைப்பதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், பாலக்காட்டில் சில நாட்களுக்கு முன் பழத்தில் வெடிபொருள் வைத்து கொடுத்ததால் 15 வயதான கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், இது குறித்த விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பீகாரை சேர்ந்த அக்தர் இமாம் என்பவர் தனது சொத்தில் பாதியை, தான் வளர்த்து வரும் யானைகளுக்கு எழுதி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர், யானைகளுக்கான லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் மோதி (15) மற்றும் ராணி (20) என்ற இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார்.
இவர் தனக்குள்ள சொத்தில் பாதியை யானைகளுக்காக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அக்தர் இமாம் கூறுகையில், “மனிதர்களை போன்று அல்ல, விலங்குகள் நம்பிக்கை உள்ளவை. நான் பல ஆண்டுகளாக யானைகள் பாதுகாப்புக்காக போராடி வருகிறேன். நான் இறந்த பிறகு எனது யானைகள் அனாதையாவதை நான் விரும்பவில்லை. யானைகள் எனது குழந்தைகள் போன்றவை. அவைகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. எனவே, ஒரு சில கோடி மதிப்புள்ள எனது நிலத்தை யானைகளுக்காக எழுதி வைக்க உள்ளேன். என் இறப்புக்கு பிறகு லாப நோக்கமற்ற தொண்டு அமைப்பானது எனது யானைகளை பார்த்துக் கொள்ளும்,” என்றார்.
தாதாக்களிடம் இருந்து உயிரை காப்பாற்றின
பல தருணங்களில் யானைகள் தனது உயிரை காப்பாற்றியதாக அக்தர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உள்ளூர் தாதாக்கள் தாக்க வந்தபோது யானைகள் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றியதாகவும், மற்றொரு முறை சிலர் துப்பாக்கியுடன் சுடுவதற்காக வந்தபோது யானைகள் சத்தமிட்டு எச்சரித்து காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.